டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தையல்காரர் பலி


டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தையல்காரர் பலி
x

புலியூர் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி தையல்காரர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

கரூர்

மோட்டார் சைக்கிள் மோதல்

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள புதுகஞ்சமனூரை சேர்ந்தவர்கள் மாணிக்கம் (வயது 39), புகழேந்தி (48). இவர்கள் 2 பேரும் கரூரில் செயல்படும் தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தையல்காரர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை புகழேந்தி ஓட்டினார். மாணிக்கம் பின்னால் அமர்ந்து இருந்தார்.புலியூர் ஏ.பி. நகர் அருகே வந்தபோது, எதிரே புலியூர் வடக்குபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (27) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில், முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புகழேந்தி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும், பிரகாஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து புகழேந்தியும், மாணிக்கமும் தூக்கி வீசப்பட்டனர்.

ஒருவர் பலி

இதில் டிராக்டரின் முன்னால் விழுந்த மாணிக்கத்தின் மீது டிராக்டரின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலத்த காயம் அடைந்து இறந்து விட்டார். புகழேந்தி படுகாயம் அடைந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த புகழேந்தியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பின்னர் மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story