கற்றல் திறனை மேம்படுத்த 'மாணவர்களை வாரம் ஒருமுறை நூலகத்திற்கு அழைத்து செல்லுங்கள்'-கலெக்டர் ஆஷாஅஜீத் அறிவுரை


கற்றல் திறனை மேம்படுத்த மாணவர்களை வாரம் ஒருமுறை நூலகத்திற்கு அழைத்து செல்லுங்கள்-கலெக்டர் ஆஷாஅஜீத் அறிவுரை
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 6:47 PM GMT)

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வாரம் ஒரு முறை நூலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

சிவகங்கை

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வாரம் ஒரு முறை நூலகத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

கற்றல் திறன்

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கூர் மற்றும் ஓ.புதூர் ஊராட்சிகளில் உள்ள நூலகங்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாங்கப்பட்ட புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் வரவேற்று பேசினார்.

விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே வாசிக்கும் திறனை ஏற்படுத்தி பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவது அவர்களின் சுய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. இதனை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் (ஏ.ஜி.ஏ.எம்.டி.) நூலகங்களில் புதிய மற்றும் நடப்பு புத்தகங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

நூலகங்கள்

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையே கற்றல் திறனை மேம்படுத்திட வாரம் ஒருமுறை நூலகத்திற்கு அழைத்து வர வேண்டும். தினசரி பள்ளி பிரார்த்தனையில் புத்தகங்களில் கற்றல் அறிவு தொடர்பாக தக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் மாணவர்கள் படித்த புத்தகங்கள் அடிப்படையில் சிறு போட்டி நடத்தி ஊக்குவித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story