தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம், புகைப்பட கண்காட்சி


தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம், புகைப்பட கண்காட்சி
x
தினத்தந்தி 18 July 2023 6:45 PM GMT (Updated: 18 July 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறையில் நடந்த தமிழ்நாடு விழா ஊர்வலம், புகைப்பட் கண்காட்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நடந்த தமிழ்நாடு விழா ஊர்வலம், புகைப்பட் கண்காட்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாக சென்று தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் பேசுகையில், கடந்த 18.07.1967 அன்று அன்றைய முதல்- அமைச்சர் அண்ணாதுரை, சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்கள். அதனை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ந் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் கடந்த ஆண்டு அறிவித்தார்.

புகைப்பட கண்காட்சி

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தமிழ்நாடு நாள் விழா மாபெரும் ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இந்த புகைப்படக் கண்காட்சி நேற்று(செவ்வாய்க்கிழமை) முதல் 23.07.2023 வரை பள்ளி மாணவ,மாணவிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு நடந்த பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் காமாட்சி மூர்த்தி, மகேந்திரன், நகரசபை தலைவர் செல்வராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story