விலைவாசி உயர்வை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


விலைவாசி உயர்வை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னையில் அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயில் இருந்து ரூ.41 ஆகவும், நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசி விலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதேபோல், கடந்த வாரம் ரூ.118 ஆக இருந்த ஒரு கிலோ துவரம்பருப்பு விலை இப்போது ரூ.42 உயர்ந்து ரூ.160 ஆக அதிகரித்திருக்கிறது. இது 36 சதவீத உயர்வு ஆகும். இது வரலாறு காணாத ஒன்றாகும். பிற பருப்பு வகைகளின் விலைகளும், மளிகை பொருட்களின் விலைகளும் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கின்றன.

சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ரேஷன் கடைகளில்...

ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்தது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கும் போதிலும், அரிசி விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கான காரணம் என்ன என்பதை அரசு ஆராய வேண்டும்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பருப்பு விலையை கட்டுப்படுத்தும் நோக்குடன் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும்.

மளிகை பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும். அதற்கு வசதியாக விலை கட்டுப்பாட்டு நிதியத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை ரூ.100 கோடியில் இருந்து ரூ.1,000 கோடியாக உயர்த்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story