தேசிய கீதத்துடன் தமிழ்நாடு அரசு குடியரசு தினவிழா கொண்டாட்டம் நிறைவு...!


தேசிய கீதத்துடன் தமிழ்நாடு அரசு குடியரசு தினவிழா கொண்டாட்டம் நிறைவு...!
x

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம் தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

சென்னை,

சென்னை மெரினாவில் 74வது குடியரசு தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைக்காவலர் சரவணன், வேலூர், செவிலியர் ஜெயக்குமார், பொன்னரசு, தூத்துக்குடி அந்தோணிசாமி, கன்னியாகுமரி ஸ்ரீகிருஷ்ணன் தஞ்சை செல்வம் ஆகியோருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சிறப்பு காவல் நிலையத்துக்கான முதல்-அமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் வடக்கு, திருச்சி கோட்டை, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையங்கள் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றன.

காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து, பள்ளி, மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்,என்.ரவி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இறுதியில் தேசிய கீதத்தம் இசைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம் நிறைவடைந்தது. பின்னர் விழா மேடையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை வழி அனுப்பி வைத்தார்.

இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வழியனுப்பி வைத்தனர்.


Next Story