மின்ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது


மின்ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது
x
தினத்தந்தி 21 Sep 2022 7:45 PM GMT (Updated: 21 Sep 2022 7:45 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் மின்ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்து இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதத்துடன் கூறினார்.

நாமக்கல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் மின்ஆளுமை திட்டங்களில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்து இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் பெருமிதத்துடன் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மின்அலுவலகம் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., பொன்னுசாமி எம்.எல்.ஏ., அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மின்அலுவலகம் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சிகள் உள்ளிட்ட 22 வெவ்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் 854 அலுவலர்களுக்கு தனியாக மின்அஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டு அவர்கள் தங்களது மின்னணு கையொப்பம் அளிக்க மின்னணு பயனர் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 2-வது இடம்

முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளால் மின்ஆளுமை திட்டங்களில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் 17-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 2-வது இடத்தை பிடித்துள்ளது. மிக விரைவில் முதல் இடம் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின்அலுவலகம் என்பது அரசு அலுவலகங்களில் உள்ள வழக்கமான பணிகளை தன்னியக்கமாக்க அனுமதிக்கும் பயன்பாட்டு தொகுப்பாகும். இந்த மென்பொருளில் உள்ள தணிக்கை மற்றும் வரலாற்று அம்சங்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கின்றன. அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் மின்அலுவலக மென்பொருள் பயன்பாட்டை தமிழக மின்ஆளுமை முகமை நடைமுறைப்படுத்த உள்ளது. இந்தாண்டுக்குள் 300-க்கும் மேற்பட்ட அரசு துறை சார்ந்த சேவைகளை மின்னணு உருவாக்கம் செய்து இ-சேவை மையம் மூலம் வழங்க உள்ளோம்.

3,645 ஊழியர்களுக்கு பயிற்சி

முதல் கட்டமாக தலைமை செயலகத்தின் அனைத்து துறைகளிலும் மின்அலுவலக மென்பொருளை செயல்படுத்த ஏதுவாக 3 ஆயிரத்து 645 ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து துறை தலைமையகங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மற்றும் அதன் கீழ் உள்ள அலுவலகங்கள் மின்அலுவலக மென்பொருள் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்களுக்கு அலுவலக தகவல் தொடர்புக்கு பயன்படுத்த பாதுகாப்பான மின்னஞ்சல் சேவை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய மின்னஞ்சல் சேவையை மேம்படுத்தி மாநிலம் முழுவதும் கூடுதலாக 50 ஆயிரம் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இ-சேவை மையம் ஆய்வு

இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில், ராசிபுரத்தில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ராஜேஸ்குமார் எம்.பி. அமைச்சரிடம் வழங்கினார். பின்னர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தில் இணையவழி சேவை வழங்கப்பட்டு வருவதையும், செயல்பாடுகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் தமிழ்நாடு மின்ஆளுமை முகமை அலுவலர் (சென்னை) சுரேந்திரன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தேவிகா ராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story