ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்


ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
x
தினத்தந்தி 22 Dec 2022 11:12 AM GMT (Updated: 22 Dec 2022 11:17 AM GMT)

ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தமிழக மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி உள்ளிட்டவற்றில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டது.

இந்த தேர்வு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இரண்டாவது தேர்வு ஏப்ரல் மாதத்திலும் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடக்க உள்ளது.

தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. ஜனவரி மாதம் நடக்கும் தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கடைசி தேதி ஜன.,12 ஆகும். தமிழகத்தில், இரு ஆண்டுகளுக்கு முன்னர் (2020-21 கல்வியாண்டு) 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை. தற்போது இவர்கள் பிளஸ் 2 படித்து வருகின்றனர். இதனால், அவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிப்பில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் குழப்பம் எழுந்தது.

இந்த நிலையில் 2020-21 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு முடித்த அனைத்து தமிழக மாணவர்களும் ஜே.இ.இ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். யாரும் பதற்றம் அடைய தேவையில்லை என பள்ளிகல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


Next Story