ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

கோப்புப்படம்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும்.

இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டி மொழி அல்ல. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.

தமிழகத்திற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை "Local Language" என்று சுருக்குவது எனும் பா.ஜ.க.வின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள், இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், மத்திய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.


Next Story