தமிழ் எண் பொறிக்கப்பட்டஆங்கிலேயர் கால மைல்கல்


தமிழ் எண் பொறிக்கப்பட்டஆங்கிலேயர் கால மைல்கல்
x

விருதுநகரில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டறியப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகரில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டறியப்பட்டுள்ளது.

மைல்கல்

விருதுநகர் செந்தி விநாயகபுரத்தில் அருப்புக்கோட்டை செல்லும் பழைய சாலையில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல் முத்து முனியசாமியாக வழிபாட்டில் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கண்டறிந்தனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பழமையான மைல்கல் உள்ளதாக புதுக்கோட்டையை சேர்ந்த ஆய்வாளர் மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளார். அந்த வகையில் விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் விருதுபட்டி என ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர் ெரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும் 'க' என்ற தமிழ் எண்ணிலும் மைல்கல்லில் குறித்துள்ளனர்.

கல்லில் கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதால் இந்த எழுத்துக்கள் தெளிவாக இல்லை. மைல்கல் வழிபாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக உள்ளது. ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து 1915-ம் ஆண்டு விருதுநகர் நகராட்சியானது 1923-க்கு முன் விருதுபட்டி என அழைக்கப்பட்டது.

வர்த்தக நகரம்

மதுரையில் இருந்து தூத்துக்குடி வரை ெரயில் பாதை போட்ட போது 1875-ல் விருதுபட்டியில் ெரயில் நிலையம் வந்தது. இதனால் விருதுபட்டி முக்கிய வர்த்தக நகரமானது. இதனால்தான் இந்த ெரயில் நிலையம் சுருக்கக் குறியீடு வி.பி.டி. என குறிப்பிடப்படுகிறது. அருப்புக்கோட்டையின் உற்பத்தி பொருட்கள் விருதுபட்டி ெரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆயின. பொருள்கள் விரைவாக கொண்டு செல்ல அருப்புக்கோட்டையில் இருந்து சரளை கல் சாலை போடப்பட்ட போது இந்த மைல் கல் வைக்கப்பட்டிருக்கலாம்.

தற்போது வைக்கப்படும் மைல்கல் போல் இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு சாலையை பார்த்தவாறு நிறுவப்பட்டிருக்கும். மேலும் விருது என்று சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றி, சின்னம், மரபு, வழி என பல பொருள்கள் உள்ளன.

வெற்றி சின்னம்

முல்லை நில ஊர்கள் பட்டி என அழைக்கப்படும். பெருங்கற்கால முதல் கன்னியாகுமரி பெருவழி பாதையில் வெற்றி சின்னமாக வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வாறு விருதுபட்டி என பெயர் பெற்றதாக கருதலாம்.

ராமநாதபுரம் மாவட்ட விபர சுவடி இவ்வூர் விருது வெட்டி என முன் அழைக்கப்பட்டதாக கூறினாலும் ஆங்கிலேயர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் இருந்த போது 1869-ல் வெளியிடப்பட்ட நூலில் விருதுபட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல் கி.பி. 1875-க்கு முன் நடப்பட்டதாக இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story