960 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு


960 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு
x

960 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

வேளாண் உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு 2022-23-ம் ஆண்டு ராபி பருவத்தில் மீண்டும் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின், பெரம்பலூர் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலமாக உளுந்து 960 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் உளுந்து விளை பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, உலர வைத்து, அயல் பொருட்கள் கலப்பின்றி கொண்டு வர வேண்டும். இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ரூ.66-க்கு கொள்முதல் செய்யப்படும். உளுந்துக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். உளுந்து விளை பொருள் அடுத்த மாதம் (மே) 29-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்து விளைப்பொருளை விற்பனை செய்து பயனடையலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story