காவிரி ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


காவிரி ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

ஆடி அமாவாசையைெயாட்டி காவிரி ஆற்றங்கரைகளில் கரூரில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கரூர்

ஆடி அமாவாசை

எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும் இந்த தர்ப்பணம் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த நிலையில், ஆடி அமாவாசை தினமான நேற்று ஆறுகள் மற்றும் கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அந்தவகையில் கரூரில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனையொட்டி காலை முதலே ஏராளமானோர் காவிரி ஆற்றுக்கு வந்து, புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். பின்னர் வீடுகளுக்கு சென்றதும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்தாண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது குறிப்பிடத்தக்கது.

குளித்தலை

குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு முக்கிய அமாவாசைகளில் ஒன்றாக கருதப்படும் ஆடி அமாவாசையை முன்னிட்டு, குளித்தலை மற்றும் குளித்தலை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட திரளானோர் நேற்று வந்திருந்தனர். ஆற்றில் புனித நீராடி ஆங்காங்கே அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் சென்று தங்களது தந்தை, தாய், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும், தங்களுக்கு எல்லா நண்மைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்று வேண்டி தங்களது முன்னோர்களுக்கு பிண்டங்கள் வைத்தும், எள் தெளித்தும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் அதை காவிரி ஆற்றில்விட்டு வழிபட்டனர். மேலும் பசுமாடுகளுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றை வழங்கினார்கள். இதையடுத்து கடம்பந்துறை காவிரிஆற்றங்கரைக்கு எதிரே உள்ள பிரசித்திபெற்ற கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று கடம்பவனேசுவரரை வழிபட்டு சென்றனர்.

நொய்யல்

நொய்யல், மரவாபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் நேற்று காலை தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக காவிரி ஆற்றுக்கு வந்தனர். பின்னர் ஆற்றில் புனித நீராடி விட்டு, கரையில் வைத்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அதனை ஆற்றி விட்டு கரைத்தனர். தொடர்ந்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story