டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்


டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்
x
தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:45 PM GMT)

இருபது வருடங்களாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

சங்க பேரவை கூட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) திருவாரூர் மாவட்ட 5-வது பேரவை கூட்டம் நீடாமங்கலத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பி.டி.லெனின் தலைமை தாங்கினார்.டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில செயலாளர் இளங்கோவன், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர், டாஸ்மாக் பணியாளர் சங்க கவுரவ தலைவர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரசேகர்ஆசாத், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், டாஸ்மாக் பணியாளர் சங்கம் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் சிவதாஸ், மாவட்ட செயலாளர் மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பாரதிமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு- இருபது வருடங்களாக பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மருத்துவ பலன்களை அளித்திட வேண்டும்.இருபது வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 30 சதவிகித போனஸ் வழங்கிட வேண்டும்.

இறந்து போன பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்க மாவட்ட துணைச்செயலாளர் ரஜினிகாந்த் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் சத்தியானந்தம் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். நிறைவில் மாவட்ட துணைத்தலைவர் பாரதிமோகன் நன்றி கூறினார்.


Next Story