தமிழ்நாட்டில் அனைத்து மின் வாகனங்களுக்கும் வரிவிலக்கு -அரசாணை வெளியீடு


தமிழ்நாட்டில் அனைத்து மின் வாகனங்களுக்கும் வரிவிலக்கு -அரசாணை வெளியீடு
x

2025-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அனைத்து மின் வாகனங்களுக்கும் வரிவிலக்கு அரசாணை வெளியீடு.

சென்னை,

தமிழ்நாடு அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு மின்வாகனக் கொள்கையின் தொடர்ச்சியாக பேட்டரி மூலம் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க வேண்டும் என போக்குவரத்து வாகன தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை வரி விலக்கு அளிக்க கோரி போக்குவரத்து கமிஷனரும் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதை கவனமாக பரிசீலித்த அரசு, இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 2025-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை அனைத்து போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத மின்வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்களித்து ஆணையிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மின்வாகனக் கொள்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி வரை மின்சார வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் 2 ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story