எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரிகள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரிகள்ளக்குறிச்சியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2023 6:45 PM GMT (Updated: 11 Sep 2023 6:45 PM GMT)

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி கள்ளக்குறிச்சியல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி


தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் எண்ணம் எழுத்தும் திட்டத்தினை கைவிடக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகர், தமிழ்நாடு தொடக்க நடுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பணி சுமைகள் அதிகரிப்பு

ஆர்ப்பாட்டத்தில் தமிழக மாநில தலைவர் லட்சுமிபதி, மாநில துணைத்தலைவர் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தினை 1 முதல் 5-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு கூடுதலான பணி சுமைகள் ஏற்படுகிறது. எனவே எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

எண்ணம் எழுத்தும் திட்டத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மதிப்பீடு செய்வதை நிறுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதை கைவிட வேண்டும்.

கற்பித்தல் பணி பாதிப்பு

ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மை கூட்டங்களை நடத்துவதால் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கிறது. கூட்ட நாள் முழுவதும் பெற்றோர்களை அழைப்பது, கூட்ட ஏற்பாடு செய்து உள்ளிட்ட பணிகள் செய்வதால் பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு 3 அல்லது 4 கூட்டங்களை மட்டுமே நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பூபாலன், ஏழுமலை உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் கலாநிதி கூறினார்.


Next Story