மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்-கலெக்டர் பேச்சு


மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்-கலெக்டர் பேச்சு
x

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறந்த வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

சைக்கிள்கள் வழங்கும் விழா

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் முன்னிலை வகித்தார்.

விழாவில் 2,799 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் இருந்து மேசை, இருக்கைகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

பள்ளி மாணவர்களை ஊக்கமளித்து பேச எனக்கு பிடிக்கும் என்பதால் இந்தநிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டேன். இப்பள்ளி, மாவட்டத்தின் முதன்மை பள்ளியாக திகழ்கிறது. 10, 12-ம் வகுப்புகளில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் சிறப்பாக உள்ளது. தேர்ச்சி மட்டுமே முக்கியத்துவம் கிடையாது. மதிப்பெண் அதிகமாக எடுப்பது தான் முக்கியம். அதற்காக முயற்சி எடுக்க வேண்டும்.

உங்களை குறைகூறுபவர்களையும், மட்டம் தட்டி பேசுபவர்களையும் கண்டு கொள்ளக் கூடாது. இலக்கை அடைவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.

வழிகாட்டியாக...

உங்களால் எதுவும் முடியும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளிப்பருவத்தில் உங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வருவது கட்டாயம்.

மாணவர்களை தினமும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். உலகம் கைக்குள் அடங்கி உள்ளது. மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். அவர்களுக்கான பாதையை காட்ட வேண்டும். மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாநில தடகள சங்க துணை தகவலை டாக்டர் எ.வ.வே.கம்பன் பேசுகையில், ''தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படிக்கும் மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஒரு தந்தையாக செயல்படுகிறார். அரசின் திட்டங்களை பயன்படுத்தி வரும் காலங்களில் 100 சதவீத தேர்ச்சியை கொடுக்க வேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியில், நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், தி.மு.க.நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரியாவிஜயரங்கன், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, தலைமை ஆசிரியை ஜோதிலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் டி.வி.எம்.நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story