ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் ஆய்வு செய்ய குழு


ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் ஆய்வு செய்ய குழு
x

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

சென்னை,

கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

ஆன்லைன் விளையாட்டுகள்

விட்டில் பூச்சியாய் பலரும் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை கோர்ட்டு ரத்து செய்தது.

இதனால் மீண்டும் ஆன்லைன் விளையாட்டுகள் தலையெடுக்க தொடங்கி உள்ளன. இதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விளக்க தவறினார்கள்

இணையதள சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து, அதனை ரத்து செய்தது. மேலும் இச்சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தபோது, அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்க தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

கேரளா, கர்நாடகம்

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

குழு அமைப்பு

கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை கண்டறியவும், இந்த விளையாட்டுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இந்த விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், 2 வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுனர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூக பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசர சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன்மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரி சட்டமாக அமையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story