கணவரால் தாக்கப்பட்ட இளம்பெண் சாவு; கொலை வழக்காக மாற்றம்


கணவரால் தாக்கப்பட்ட இளம்பெண் சாவு; கொலை வழக்காக மாற்றம்
x

நெல்லை அருகே கணவரால் தாக்கப்பட்ட இளம்பெண் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

செங்கோட்டை மேலூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் செல்வகுமார் (வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மாரித்தாய் (28). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாரித்தாய் கணவரை பிரிந்து நெல்லை தச்சநல்லூர் அருகே அழகநேரி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி செல்வகுமார் தனது மனைவியை பார்ப்பதற்காக தச்சநல்லூர் வந்தார். அப்போது வீட்டில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் மாரித்தாயை சரமாரியாக கால் மற்றும் கையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த மாரித்தாய் நேற்று முன்தினம் காலையில் உயிர் இழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story