திருமங்கலத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்


திருமங்கலத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
x

திருமங்கலத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் முகமதுசாபுரம் தேவர் தெருவை சேர்ந்தவர் ஓச்சு மகன் மதன பிரகாஷ் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 12 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் மதனபிரகாஷ் நேற்று காலை 8 மணி அளவில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறினார். அங்கிருந்து குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் சின்னச்சாமி, திருமங்கலம் நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து செல்போன் கோபுரத்தில் இருந்த மதன பிரகாசை இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு மறுத்த மதனபிரகாஷ் முன் விரோதம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு என்னை தாக்கி என்னுடைய இருசக்கர வாகனத்தை எரித்தனர். அவர்கள் மீது திருமங்கலம் நகர் போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அங்கிருந்து குதிக்க போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது அங்கு வந்த திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கையை திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்ததை அடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அவர் செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கினார். வெயில் அதிகமாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்ட அவருக்கு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்த பின் திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


Next Story