மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை


மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர்,

குடிபோதையில் தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பாடிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 26). இவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததால், மனைவி பிரியா அடிக்கடி கோபித்துக்கொண்டு தன் அம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம். அதேபோல் கடந்த வாரம் சத்தியமூர்த்தி குடித்துவிட்டு தகராறு செய்த நிலையில் கோபித்து கொண்டு பிரியா தன் குழந்தையோடு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் சத்தியமூர்த்தியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு சென்று திடீரென தூக்கில் தொங்கினார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை, மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சத்தியமூர்த்தி இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story