மரத்தில் கார் மோதி வாலிபர் பலி

கேரளாவில் நாயை வாங்கி கொண்டு வந்த போது மரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
பொள்ளாச்சி,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாம்பர்புரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 30). கொடைக்கானல் ஐங்கனா கிரவுண்ட் லேக் ரோட்டை சேர்ந்தவர் ராம்குமார் (26). நண்பர்களான இவர்கள் கொடைக்கானலில் பெட் ஷாப் (செல்லப்பிராணிகள் கடை) வைத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு நாயை வாங்குவதற்கு கேரளா மாநிலம் திருச்சூருக்கு சென்றனர். பின்னர் நாயை வாங்கி கொண்டு காரில் கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை ராம்குமார் ஓட்டி வந்தார். பொள்ளாச்சி அருகே செடிமுத்தூர் பகுதியில் வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராம்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






