செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் திடீர் சாவு...!


செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் திடீர் சாவு...!
x

செல்போன் திருட்டு வழக்கில் போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் திடீரென உயிரிழந்தார். இதுபற்றி அவரது குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

திரு.வி.க.நகர்,

பஸ்சில் செல்போன் திருட்டு

சென்னை திரு.வி.க.நகர், நீலம் தோட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). ரவுடியாக வலம் வந்த இவர், பழைய குற்றவாளி ஆவார். இவர் மீது தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் காலை திருப்போரூரில் இருந்து கிண்டி செல்லும் மாநகர பஸ் துரைப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது அதில் பயணம் செய்த காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஸ்டீபன் கிளாடியா (21) என்பவரிடம் தினேஷ்குமார் தனது கூட்டாளி ராமச்சந்திரனுடன் சேர்ந்து செல்போனை திருடினர்.

அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், தினேஷ்குமாரை மடக்கிப்பிடித்தனர். அவரது கூட்டாளி ராமச்சந்திரன் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட தினேஷ்குமாரை பொதுமக்கள் துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

எழுதி வாங்கி அனுப்பினர்

துரைப்பாக்கம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, ராஜாமணி, தலைமை காவலர் பார்த்தசாரதி ஆகியோர் பிடிபட்ட தினேஷ்குமாரிடம் விசாரித்தனர். அப்போது வாலிபரிடம் பறித்த செல்போன், கூட்டாளி ராமச்சந்திரனிடம் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், தினேஷ்குமாரிடம் அவருடைய மனைவி கவுசல்யாவை தொடர்பு கொண்டு பேச வைத்தனர். அப்போது தினேஷ்குமார், பஸ்சில் பயணியிடம் பறித்த செல்போனை ஸ்டான்லி ஆஸ்பத்திரி அருகே நிற்கும் ராமச்சந்திரனிடம் இருப்பதாகவும், அதை வாங்கி வந்து கொடுக்கும்படியும் கூறினார்.

அதன்படி கவுசல்யாவும், தினேஷ்குமாரின் தாய் லதாவும் ஆட்டோவில் அங்கு சென்று ராமச்சந்திரனிடம் செல்போனை வாங்கி துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் தினேஷ்குமாரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

திடீர் சாவு

பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்த தினேஷ்குமார் சோர்வாக இருப்பதாக கூறினார். அவருக்கு மாதுளம் பழம் ஜூஸ் கொடுத்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பின்னர் 2 தோசை சாப்பிட்ட தினேஷ்குமார் இரவு 10 மணி அளவில் கழிவறைக்கு சென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தினேஷ்குமாரின் அண்ணன் செந்தில்குமார், ஆட்டோ மூலம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்று காண்பித்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தினேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் துன்புறுத்தியதாக புகார்

இது குறித்து செந்தில்குமார், திரு.வி.க. நகர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், "செல்போன் திருடிய வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற துரைப்பாக்கம் போலீசார், தினேஷ்குமாரை துன்புறுத்தியதால் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கூறி இருந்தார்.

அதன்பேரில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

மேலும் இது குறித்து எழும்பூர் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு ஜெகதீசன், தினேஷ்குமாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

உயிரிழந்த தினேஷ்குமார், வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்தார். 2 மாதத்துக்கு முன்புதான் திரு.வி.க.நகர் பகுதிக்கு குடும்பத்துடன் குடிவந்தார். தினேஷ்குமாரின் மனைவி கவுசல்யாவுக்கு ஏற்கனவே முருகன் என்பவருடன் திருமணமாகி 5 வயதில் வினோதினி என்ற மகள் உள்ளார். முருகனை விவாகரத்து செய்த கவுசல்யா, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தினேஷ்குமாரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story