போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

கல்லூரி மாணவியை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

கல்லூரி மாணவி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தின்னகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 26). கூலித்தொழிலாளியான இவர், 17 வயதான கல்லூரி மாணவி ஒருவருடன் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தைக்கூறி பழகியிருக்கிறார். மேலும் மாணவியை அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் மாணவியை திருப்பூருக்கு அழைத்து சென்று தங்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியை காணவில்லை என கூறி அவரது பெற்றோர் தரப்பில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து மாணவியை மீட்டனர். மேலும் 17 வயதான கல்லூரி மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து வீரமணியை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். இதில் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அதன்படி வீரமணி ஆயுள் தண்டனையை அனுபவிப்பார். இதையடுத்து வீரமணியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


Next Story