குறிஞ்சிப்பாடி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது


குறிஞ்சிப்பாடி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2022 6:45 PM GMT (Updated: 11 Oct 2022 6:46 PM GMT)

குறிஞ்சிப்பாடி அருகே வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அய்யந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 39). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி, பெருமாள் ஏரி கரையில் சேற்றில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து ஆடுர்அகரம் கிராமத்தை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் நடராஜிடம், லாரியை மீட்க கோகுலகிருஷ்ணன் உதவி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த நடராஜ் தனது ஆதரவாளர்கள் ஆடூர்அகரத்தை சேர்ந்த தரணிதரன், சந்துரு, ராஜேஷ், ஆகாஷ், முகுந்தன், சந்தோஷ், ராஜசேகர், பாரதி ஆகியோருடன் சேர்ந்து கோகுலகிருஷ்ணனை ஆபாசமாக திட்டி, தாக்கியுள்ளனர். மேலும் அவரது வீட்டின் கதவை உடைத்ததுடன், இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட கோகுலகிருஷ்ணனின் நண்பர் கொத்தவாச்சேரியை சேர்ந்த மணிகண்டபிரபுவை(27) ஓடஓட விரட்டிச் சென்று கொத்தவாச்சேரி பஸ் நிறுத்தத்தில் வைத்து கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த மணிகண்ட பிரபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கோகுலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் நடராஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தரணிதரன்(20), சந்துரு(22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் நடராஜ் உள்ளிட்ட 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story