பற்களை பிடுங்கிய விவகாரம்: காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியீடு


பற்களை பிடுங்கிய விவகாரம்: காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியீடு
x

பாதிக்கப்பட்ட சுபாஷ் என்ற நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

கடந்த 10-ந்தேதி அமுதா ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட விசாரணை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சுபாஷ், மாரியப்பன், வேதநாராயணன் ஆகிய 3 பேர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கட்டிங் பிளேயரை வைத்து 3 பற்களை பிடுங்கியதாக பாதிக்கப்பட்ட சுபாஷ் என்ற நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல் பிடுங்கப்பட்ட போது அதிக ரத்தம் வெளியேறியதாகவும், காதில் கட்டிங் பிளேயரை வைத்து அழுத்தியதாகவும் அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மற்றும் சிலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




Next Story