பற்களை பிடுங்கிய விவகாரம்: தமிழக டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு


பற்களை பிடுங்கிய விவகாரம்: தமிழக டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
x

தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவர்களின் பற்களை பிடுங்கி ஏ.எஸ்.எபியாக இருந்த பல்வீர் சிங் சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து காவல் அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து இந்த வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பாதிக்கப்பட்ட சுபாஷ் என்ற நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை அறிக்கையை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story