அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் ஜெயந்தி விழா-பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு


அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் ஜெயந்தி விழா-பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:45 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி வழிபட்டனர்.

காலபைரவர் ஜெயந்தி

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் காலபைரவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவிலில் காலபைரவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி அதிகாலை முதலே சாமிக்கு நறுமண பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும் பல்வேறு வழிபாடு நிகழ்ச்சியும், 1,008 ஆகம பூஜைகளும், வேதபாராயணம் உள்பட சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கு உபகார பூஜைகளுடன், தங்க கவச அலங்கார சேவை மற்றும் மகாதீபாராதனை நடந்தது.

சத்ரு சம்ஹார யாகம்

இரவு கோவிலில் 108 கிலோ மிளகு, 1,008 கிலோ மிளகாய் கொண்டு சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. பின்னர் தட்சிணகாசி காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு வரிசையில் சென்று, சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் அவர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், குருக்கள் கிருபாகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story