தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிலிருந்து பூண்டி வரை கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்


தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிலிருந்து பூண்டி வரை கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
x

தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிலிருந்து பூண்டி வரை செல்லும் கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.507 டி.எம்.சி. ஆகும். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம். இந்த திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

தற்போது வாட்டி எடுத்து வரும் கோடை வெயில் காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கண்ட வேறு அணையிலிருந்து பூண்டி எதுக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசை கேட்டுக்கொண்டது. அதன் பேரில் கடந்த 1-ந்தேதி கண்டலேறு பூண்டி எரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 152 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து 3-ந்தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்தது.

கடந்த காலங்களில் பலத்த மழைக்கு ஜீரோ பாயிண்டில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் கரைகள் சேதம் அடைந்தன. இந்தக் கறைகள் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வந்தன.

இதனால் ஜீரோ பாயிண்ட்டுக்கு வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரை ஊத்துக்கோட்டை அருகே ஜங்காளபள்ளியில் உள்ள மதகுகள் வழியாக கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதனால் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து நேற்று முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது.

எனவே கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஜீரோ பாயிண்டில் இருந்து நேற்று பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் சென்றடைந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 170 கன அடி விதம் வந்து கொண்டு இருந்தது. பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story