தென்காசி: சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று ஆடித்தபசு காட்சி..!


தென்காசி: சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று ஆடித்தபசு காட்சி..!
x

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி 10-ந் தேதி இன்று நடக்கிறது.

சங்கரன்கோவில்,

தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலங்களில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆடித்தபசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடித்தபசு திருவிழா நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆடித் தபசு திருவிழா கடந்த ஜூலை 31-ந் தேதி கோமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி பதினோறாம் திருநாளான 10-ந் தேதி இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 5 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு கும்ப அபிஷேகம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்- அலங்காரம் நடந்தது.

காலை 11.40 மணிக்கு மேல் தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் தபசுக்காட்சிக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தபசு காட்சி கொடுக்கிறார்.

2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தபசு காட்சி நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு திருவிழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் மேற்பார்வையில், தென்காசி மாவட்ட சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆடித்தபசு திருவிழாக்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story