தென்காசி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி


தென்காசி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை- காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி
x

தென்காசி தொகுதியில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றிபெற்றுள்ளார்.

தென்காசி,

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியனை விட 370 வாக்குகள் அதிகமாக பெற்று பழனிநாடார் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின்போது குளறுபடிகள் நடந்ததாகவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தபால் ஓட்டுக்களை மட்டும் மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான 2,589 தபால் வாக்கு எண்ணும் பணி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மறு வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 368 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முன்னதாக மறுவாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Next Story