சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராகி சாட்சியம்


சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராகி சாட்சியம்
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:45 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்

விழுப்புரம்

விழுப்புரம்

பாலியல் தொல்லை வழக்கு

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ஆஜர்

மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சியான தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவர் சீமாஅகர்வால், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்தார். இந்த சாட்சியம் முடிந்ததும் சீமாஅகர்வாலிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரின் தரப்பு வக்கீல்கள் தனித்தனியாக குறுக்கு விசாரணை செய்தனர்.

இந்த சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணையின் விவரங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் ஓய்வுபெற்ற முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.


Next Story