தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில்18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறப்பு


தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில்18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று திறப்பு
x

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்பட உள்ளதாக கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

நெல் கொள்முதல் நிலையம்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் மையங்களில் விற்பனை செய்து பயனடைய ஏதுவாக 37 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

அதன்படி முதல் கட்டமாக கள்ளிப்பட்டி 1, 2, ஏழூர்-1, நஞ்சைபுளியம்பட்டி-1, 2, 3, புதுவள்ளியாம்பாளையம் 1, 2, 3, 4, காசிப்பாளையம்-1, 2, என்.ஜி.பாளையம் -1, 2, 3, 4, கரட்டடிப்பாளையம் -1 மற்றும் டி.என்.பாளையம் ஆகிய 18 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

கிராம நிர்வாக அலுவலர் சான்று

நெல் அறுவடையை பொறுத்து 2-ம் கட்டமாக வருகிற 25-ந் தேதி, கூகலூர்-1, 2, புதுக்கரைப்புதூர் 1, 2, 3, கருங்கரடு-1,2, பெருந்தலையூர், மேவானி 1, 2, நஞ்சைதுறையாம்பாளையம், கொண்டையம்பாளையம், சவுண்டப்பூர்-1,2, கள்ளிப்பட்டி-3, ஏழூர்-2, நஞ்சைபுளியம்பட்டி-4, புதுவள்ளியாம்பாளையம்-5 மற்றும் கரட்டடிப்பாளையம்-2 ஆகிய 19 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் 'ஏ' கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 160 வீதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115 வீதத்திலும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலையத்திற்கு நேரில் வந்து பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்ய கிராம நிர்வாக அலுவலர் சான்று, நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், விவசாயியின் ஆதார் அட்டை நகல், விவசாயியின் வங்கி கணக்கு புத்தக நகல், விவசாயியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இந்த மையங்களில் விற்பனை செய்து பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


Next Story