பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் - விண்ணை பிளந்த 'அரோகரா' முழக்கம்...!


பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் - விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!
x

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல்,

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி 29-ந்தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது.

மதியம் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் ரத வீதியில் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருத்தேரில் வீற்றிருந்த முருகனை தரிசனம் செய்தனர். பக்தர்களின் 'அரோகரா... அரோகரா..' முழக்கம் விண்ணை பிளந்தது.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர். பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளிக்கிறது.

பக்தர்கள் பாதுகாப்புக்காக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story