தங்கம்மாள் ஓடையில் நகராட்சி பொறியாளர் ஆய்வு


தங்கம்மாள் ஓடையில் நகராட்சி பொறியாளர் ஆய்வு
x
திருப்பூர்


உடுமலையில் உள்ள தங்கம்மாள் ஓடையை நகராட்சி பொறியாளர் ஆய்வு செய்தார்.

தங்கமாள் ஓடை

உடுமலை நகரின் நுழைவுப்பகுதியில் உடுமலை - பொள்ளாச்சி சாலையை ஒட்டிய பகுதியில் தங்கமாள் ஓடை உள்ளது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற உபரிநீர் செல்கிறது. இந்த ஓடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரபட்டு அதன் 2 புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் தூர் வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை முழுமையாக அகற்ற வில்லை. இதனால் அவை சரிந்து மீண்டும் ஓடையை ஆக்கிரமித்துக் கொண்டது. இதன் காரணமாக தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வந்ததுடன் ஓடை முழுவதும் செடிகள் புற்கள் முளைத்து புதர் மண்டியது.

தரைமட்ட பாலம் சேதம்

அதைத்தொடர்ந்து தங்கம்மாள் ஓடையை தூர்வாரி அதில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் பெயரளவுக்கு மட்டுமே ஓடையில் தேங்கிய மண் அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி வருகிறது.

மேலும் தங்கமான ஓடையின் 2 புறங்களையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட தரைமட்ட பாலமும் சேதம் அடைந்தது. அதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு தரைமட்ட பாலங்கள் இடித்து அகற்றப்பட்டது. அதில் ஒரு பாலம் அபாயகரமான நிலையில் உள்ளது. பொதுமக்களும் வேறு வழியின்றி அதை கடந்து சென்று வருகின்றனர்.

நகராட்சி பொறியாளர் ஆய்வு

இடித்து அகற்றப்பட்ட பாலங்கள் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம்மாள் ஓடையை கடப்பதற்கு நீண்ட தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி பிரசுரமாகி இருந்தது.

இந்த சூழலில் நகராட்சி பொறியாளர் சண்முக வடிவு (உடுமலை பொறுப்பு) நேற்று தங்கம்மாள் ஓடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேதம் அடைந்த பாலம், தூர்வாரப்படாமல் உள்ள பகுதி, தண்ணீர் தேங்கி உள்ளதை ஆய்வு செய்தார். இந்தப் பணியின் போது நகராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.


Next Story