ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் மிளிரும் தஞ்சை


ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் மிளிரும் தஞ்சை
x

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா நாளை மறுநாள் தொடங்குகிறது.

தஞ்சை,

தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.

தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா நாளை மறுநாள் தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான 25 -ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த இரு நாள் விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை கோவில் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது. ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவை முன்னிட்டு வருகிற 25-ம் (புதன்கிழமை) தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story