தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:46 PM GMT)

வடதொரசலூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமடம் கட்ட அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதில் வேப்பூர் திருத்தொண்டு வளர் திருநாவுக்கரசர் திருமடம் சிவ தங்கதுரை தலைமையில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதை தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேளதாளம் முழங்க கடம் புறப்பட்டது. பின்னர் திருவாரூர் சிவ நடராஜன் தலைமையில் தான்தோன்றீஸ்வரருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து மாலையில் திருக்கல்யாண வழிபாடு நடைபெற்றது. விழாவில் திருக்கழுகுன்றம் சதாசிவ பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் சிவ தாமோதரன், சென்னை சிவலோக திருமடம் வாதவூர் அடிகளார் ஆகியோர் திருமுறை விண்ணப்பம் நிகழ்த்தினர். பழனி பாட்டி ராஜம்மாள் சங்கரன் மாகேஸ்வர பூஜை நடத்தினார். இளையாங்குடி மாறநாயனார் திருமடம் பாசார் சிவ சிவபாலன் விழா பணிகளை ஒருங்கிணைத்தார். முன்னதாக நேற்று முன்தினம் மாலை தியாகதுருகம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் உணவகம் அருகில் இருந்து சிவ தாமோதரன் தலைமையில் பஸ் நிலையம், அண்ணா நகர் வழியாக கைலாய வாத்தியங்கள் முழங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவனடியார் ஜெய்சங்கர் மற்றும் சிவனடியார்கள், திருப்பணி குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story