தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை தொடங்குகிறது


தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை தொடங்குகிறது
x

தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை தொடங்குகிறது.

திருச்சி

மலைக்கோட்டை:

சித்திரை தேர்த்திருவிழா

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று(திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு உச்சிப்பிள்ளையாருக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தி நடக்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

நாளை மறுநாள்(புதன்கிழமை), 27 மற்றும் 28-ந்தேதிகளில் இரவு 7 மணிக்கு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது. 29-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவரது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரத்தினாவதிக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணியளவிலும், மே 1 மற்றும் 2-ந் ேததிகளில் இரவு 7 மணிக்கும் வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளுகின்றனர். 2-ந் தேதி இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் வேடுபறி ஐதீகம் நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தேர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி 3-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க்கால் கண்டருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந்தேதி காலை 8 மணிக்கு நடராஜர் புறப்பாடும், 10 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் தெப்பக்குளம் கூடப்பள்ளி மண்டபத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. இரவில் கொடியிறக்கம் மற்றும் சுவாமி எதாஸ்தானம் சேர்தல், ஆச்சார்ய உற்சவம் நடைபெறுகிறது.

பிச்சாடனார் புறப்பாடு

5-ந்தேதி காலை திருகுறிப்பு தொண்டர் உள்புறப்பாடு, இரவு 7 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனம், அம்பாள் பல்லக்கில் எழுந்தருளலும், 6-ந்தேதி தாயுமான அடிகள் உற்சவம், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சாமிக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் அபிஷேக, ஆராதனை மற்றும் இரவு 7 மணிக்கு உள் திருமுறை பாராயணத்துடன் ஏகாந்த சேவை, சுவாமி-அம்பாள் யதார்த்தமான சேர்த்தல் ஆகியவையும், 7-ந்தேதி இரவு 7 மணிக்கு பிச்சாடனார் புறப்பாடு திருவீதி உலாவும், 8-ந்தேதி இரவு 6 மணிக்கு சண்டிகேஸ்வர் திருவீதி உலாவும் நடக்கிறது. 9-ந்தேதி காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.


Next Story