ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆடிப்பூர பிரம்மோற்சவம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும். இந்த கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.

இதில் கார்த்திக்கை தீபத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் போன்றவை முக்கியமானவை ஆகும்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

கொடியேற்றம்

தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தின் முன்பு பராசக்தி அம்மன் பக்தர்கள் மத்தியில் எழுந்தருளினார்.

பின்னர் பராசக்தி அம்மன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை படிக்க மங்கள வாத்தியங்கள் முழங்க சுமார் 6 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது.

மேலும் விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவம் மாட வீதியில் உலா நடைபெற உள்ளது.

இந்த விழா வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது.

வளைகாப்பு உற்சவம்

வழக்கமாக ஆடிப்பூர பிரம்மோற்சவம் விழா நிறைவு நாளன்று பூரம் நட்சத்திரம் வரும். அன்றைய தினம் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், அன்று நள்ளிரவு 12 மணியளவில் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீ மிதி விழாவும் நடைபெறும்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடக்க நாளன்றே பூரம் நட்சத்திரம் வருவதால் இன்று மாலை கோவிலில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் அறங்காவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story