இளையராஜா மகள் பவதாரிணி உடல் சென்னை கொண்டுவரப்பட்டது


இளையராஜா மகள் பவதாரிணி உடல் சென்னை கொண்டுவரப்பட்டது
x
தினத்தந்தி 26 Jan 2024 10:27 AM GMT (Updated: 26 Jan 2024 10:39 AM GMT)

பவதாரிணியின் உடல் தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுச்செல்லப்படுகிறது.

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

இலங்கையில் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 47.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலைய நடைமுறைகள் முடிந்து, பவதாரிணி உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பவதாரிணியின் உடலை பெறுவதற்காக அவரது சகோதரர் கார்த்திக் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் சென்னை விமான நிலைய கார்கோ பிரிவிற்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவரது உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டுச்செல்லப்படுகிறது. அங்கு பவதாரிணியின் உடலுக்கு பொதுமக்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு பவதாரிணியின் உடல் இன்று நள்ளிரவு சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச்செல்லப்படும் என்றும், அங்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story