ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சாவு
![ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சாவு ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2022/08/13/821911-11963788.webp)
வால்பாறையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
வால்பாறை
வால்பாறையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2 வயது சிறுவன்
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மந்தூரஹந்தி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும், 2 வயதில் அரவிந்த் என்ற மகனும் உள்ளனர். மந்தூரஹந்தி பல ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சேக்கல்முடி எஸ்டேட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாட்டர் பால்ஸ் எஸ்டேட்டில் குடும்பத்துடன் தங்கி தேயிலை தோட்ட பணியை செய்து வருகிறார்.
சாவு
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சிறுவன் அரவிந்த் வீட்டின் முன்பு உள்ள ஆற்றின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். இந்த நிலையில் சிறுவனை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மந்தூரஹந்தி, தனது மகனை அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் சிறுவனை காணவில்லை.
இதற்கிடையில், அங்கிருந்த சிலர் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது நீண்ட தூரத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில் ஆற்றோர செடியில் சிக்கியபடி சிறுவனின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.
சோகம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காடம்பாறை போலீசார் விரைந்து வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வயது சிறுவன் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு இறந்த சம்பவம் வால்பாறை எஸ்டேட் தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.