கடையில் ஜவுளி எடுத்தபோது பெண்ணுக்கு தாலி கட்டிய காதலன்


கடையில் ஜவுளி எடுத்தபோது பெண்ணுக்கு தாலி கட்டிய காதலன்
x

கடையில் ஜவுளி எடுத்தபோது பெண்ணுக்கு காதலன் தாலி கட்டினார்.

திருச்சி

மலைக்கோட்டை:

ஜவுளி எடுத்தனர்

கடலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பெண்ணும், 34 வயதுடைய அவரது உறவினரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணை, வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு, வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து திருமணத்திற்கான ஜவுளிகளை எடுப்பதற்காக நேற்று காலை திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு அந்த பெண்ணுடன், உறவினர்கள் வந்துள்ளனர். அவர்கள், அந்த கடையில் ஜவுளி எடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த பெண்ணின் காதலன் திடீரென அங்கு வந்துள்ளார்.

ஏற்கனவே திருமணமானவர்

உறவினர்கள் சுதாரிப்பதற்குள், அவர் தனது கையில் வைத்திருந்த தாலியை, அந்த பெண்ணின் கழுத்தில் கட்டி உள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் அங்கு வந்து, இரு தரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணின் காதலனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து, தாலியை அவரது காதலனிடம் கொடுத்தனர். பின்னர் அந்த பெண்ணை அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story