நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிலஎடுப்பு தாசில்தார் அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு-ஆய்வு கூட்டத்துக்கு சென்றதால் ஊழியர்கள் உயிர் தப்பினர்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிலஎடுப்பு தாசில்தார் அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு-ஆய்வு கூட்டத்துக்கு சென்றதால் ஊழியர்கள் உயிர் தப்பினர்
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு தாசில்தார் அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு தாசில்தார் அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கலெக்டர் அலுவலகம்

நெல்லை கொக்கிரகுளத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம், நெல்லை உதவி கலெக்டர் அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், சுரங்கம் மற்றும் புவியியல் துறை அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.

இதனால் இந்த வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் தற்போது மகளிர் திட்ட அலுவலகம், புவியியல் சுரங்கம், கைத்தறித்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் வாஞ்சி மணியாச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள ரெயில்வே பாதைக்கான நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலக அறையின் மேற்கூரை கட்டிடம் நேற்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், போலீசார் ஓடிச் சென்று பார்வையிட்டனர்.

அதே நேரத்தில் இந்த அலுவலகத்தையொட்டி மற்ற அலுவலகங்களில் இருந்த ஊழியர்களும், மாடியில் செயல்பட்டு வந்த மகளிர் திட்ட அலுவலகத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர்.

அலுவலகத்திற்கு பூட்டு

கட்டிடம் இடிந்து விழுந்தபோது அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேற்கூரை இடிந்து விழுந்ததையடுத்து அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சுரங்கம் மற்றும் புவியியல் துறை அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், வருவாய் நீதிமன்ற அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மேற்பார்வையில் வருவாய் துறை ஊழியர்கள் அந்த அனைத்து அலுவலகங்களுக்கும் பூட்டு போட்டனர்.

உயிர் தப்பினோம்

இதுகுறித்து மகளிர் திட்ட அலுவலக ஊழியர்கள் கூறுகையில், 'மகளிர் திட்ட அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்புறம் என 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறோம். மதிய உணவு இடைவேளையில் இடிந்து விழுந்த பகுதியில் அமர்ந்து சாப்பிடுவதும் வழக்கம். ஆனால் நேற்று காலை அலுவலகத்திற்கு வந்தவுடன் ஊழியர்கள் வாராந்திர ஆய்வு கூட்டத்திற்கு சென்றதால் உயிர் தப்பினோம்' என்றனர்.


Next Story