கார் கவிழ்ந்து பெண் பலி; கணவர், மகன் படுகாயம்


கார் கவிழ்ந்து பெண் பலி; கணவர், மகன் படுகாயம்
x

வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலியானார். உடன் வந்த அவரது கணவர், மகன் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர்:

மதுரை தாசில்தார் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). அவருடைய மனைவி சங்கரவடிவு (36). இவர், மதுரையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு, சாய்சங்கர் (7) என்ற மகன் உள்ளார்.

இன்று காலை ஈரோட்டில் உள்ள சங்கரவடிவின் பெற்றோரை பார்ப்பதற்காக 3 பேரும் காரில் புறப்பட்டனர். காரை நாகராஜ் ஓட்டினார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் கல்வார்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த தடுப்பு கல்லில் மோதி உருண்டு, மீண்டும் நடுரோட்டுக்கு வந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் நாகராஜ், சங்கரவடிவு, சாய்சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சங்கரவடிவு பரிதாபமாக இறந்தார்.

நாகராஜ், சாய்சங்கர் ஆகியோருக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story