தாறுமாறாக ஓடிய கார், 5 மின்கம்பங்கள் மீது மோதியது
வேதாரண்யம் அருகே தாறுமாறாக ஓடிய கார், 5 மின்கம்பங்கள் மீது மோதியதால் மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தாறுமாறாக ஓடிய கார், 5 மின்கம்பங்கள் மீது மோதியதால் மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.
மின்கம்பங்கள் மீது மோதிய கார்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது26). இவர் காரை ஓட்டி கொண்டு நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கரியாப்பட்டினம் கீழக்காடு, மன்மதன் கோவிலடி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மீது மோதியது. இதில் ஒரு மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. மேலும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது.
மின்தடை
இதன் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மின் சாதனங்கள், மின் வயர்கள் சேதமடைந்தன. மின்கம்பத்தில் கார் மோதியதால் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டதால் 5 கிராமங்கள் இருளில் மூழ்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காரியப்பட்டினம் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மின்கம்பங்கள் மீது காரில் மோதிய தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.