ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்-பொதுமக்கள் மறியல்


ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்-பொதுமக்கள் மறியல்
x

ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்-பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

அடிமனை பிரச்சினை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டுகளாக அடிமனை பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளி திருமுத்தம் கிராமத்தில் புதிய பெயரில் பத்திரங்கள் பதியக்கூடாது என்று ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்திலும், மேற்கண்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, வரைபட அனுமதி, கட்டிட நிறைவு சான்று போன்ற எந்த அனுமதி சான்றுகளும் கொடுக்கக்கூடாது என்று திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும், புதிய பெயரில் இந்த பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என்று ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தலையிட்டு, மேற்கண்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்கள் இடங்களை விற்பதற்கும், வங்கியில் வைத்து கடன் பெறுவதற்கும் அல்லது உயில் எழுதவோ, பழைய வீடுகளை இடித்து புனரமைப்பு செய்வதற்கோ முடியாமல் தவித்து வருகின்றனர். தேர்தல் நேரங்களில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வாக்கு சேகரிக்கும்போது வேட்பாளர்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினையை உடனடியாக தீர்த்து விடுவோம் என்று வாக்குறுதிகளை கூறிச்செல்கின்றனர். ஆனால் தற்போது வரை அடிமனை பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மறியல்-கைது

எனவே ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிமனை பிரச்சினையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் தலையிட்டு ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து நேற்று ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.

இதனால் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம், ஸ்ரீரங்கம் அடிமனை ஒருங்கிணைப்புக்குழு வரதராஜன், மாருதி ராமசாமி, பன்னீர்செல்வம், சின்னகண்ணு உள்பட 65 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் உணவு உண்ண மறுத்து திருமண மண்டபத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story