மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்-அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளிடம் கண்டிப்பு


மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்-அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளிடம் கண்டிப்பு
x

மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளிடம் கண்டிப்புடன் கூறினார்.

மதுரை


மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளிடம் கண்டிப்புடன் கூறினார்.

சாலை வசதிகள்

மதுரை மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-5 ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம், மாநகராட்சி அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது. மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருவதில் மற்ற துறைகளை விட உள்ளாட்சி துறை முன்னோடியாக இருக்கிறது. அந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சியில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பள்ளிக்கூடங்கள் சீரமைப்பு, அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், நலவாழ்வு மையங்கள், பூங்காக்கள் பராமரிப்பு, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் சாலைகள் சீரமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடை திட்டம், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், தெருவிளக்குகள் பராமரிப்பு, அங்கன் வாடி மையங்கள், பள்ளி கூடுதல் கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், கவுன்சிலர் அலுவலகம் உள்ளிட்ட மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

கண்டிப்பு

அனைத்து மக்களும் பணிகளும் சரியான நேரத்தில் நடக்கிறதா என்பதனை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து சாலைகளை உடனுக்குடன் சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்காதவாறு அருகில் உள்ள மழைநீர் வடிகால்களில் சேருவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அமைச்சர் மூர்த்தி விரிவாக்க பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மக்கள் பணிகளை காலதாமதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளிடம் கண்டிப்புடன் கூறினார்.

கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, கவுன்சிலர் ராதிகா கவுரிசங்கர், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் வினோத்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, உதவி ஆணையாளர் காளிமுத்தன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, உதவி ஆணையாளர் (வருவாய்) மனோகரன், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story