காப்பு காட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்


காப்பு காட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்
x

செஞ்சி அருகே காப்பு காட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

விழுப்புரம்

செஞ்சி

அழுகிய நிலையில் பிணம்

செஞ்சியை அருகே உள்ள காரை காப்பு காட்டு பகுதியில் புதருக்கு இடையே அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்ததை அங்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்தனர். இறந்து கிடந்த நபர் டீசர்ட், வெள்ளை வேட்டி அணிந்துள்ளார். வேட்டியின் ஒருபக்கம் மார்பு பகுதியிலும் முறுக்கப்பட்ட நிலையில் இன்னொரு பகுதி கழுத்துக்கு கீழ் பகுதி வளியாக வெளியேயும் வந்து கிடந்தது. இதனால் அவரை யாரேனும் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.

பின்னர் இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அனந்தபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.

தொழிலாளி

விசாரணையில் அவர் செஞ்சியை அடுத்த காரை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகமுத்து(வயது 40) என்பதும், திருமணமாகாத தொழிலாளியான இவர் அடிக்கடி வெளியூர் சென்று வருவார் என்பதும், கடந்த 10-ந் தேதி வெளியே சென்று வருவதாக கூறி சென்ற நாகமுத்து பின்னர் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாகமுத்து காப்பு காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அவரை யாரேனும் கொலை செய்து விட்டு உடலை காப்பு காட்டுக்குள் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story