சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

தில்லைவிளாகம்:

முத்துப்பேட்டை அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமுதாய பல்நோக்கு கட்டிடம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்து ஜாம்புவானோடை கல்லடிகொல்லை சமுதாய பல்நோக்கு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்திற்கு கல்லடிகொல்லை, அம்பட்டங்கொல்லை, தண்டாங்கொல்லை, தெற்குகாடு போன்ற பகுதிகளில் இருந்து பேரிடர் காலங்களில் பொதுமக்கள் வந்து தங்குவார்கள். இந்த நிலையில் இந்த கட்டிடத்திற்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.

சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது

இந்த நிலையில் நேற்று பெய்த சிறு மழைக்கே இந்த சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் இப்பகுதி சாலையில் மேலும் தண்ணீர் தேங்கி காணப்படும். இதனால் முற்றிலும் போக்குவரத்து தடை ஏற்படும்.

இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த இந்த சாலையை மழைக்காலத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியில் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story