இறவை பாசன திட்டத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


இறவை பாசன திட்டத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

தகட்டூர் இறவை பாசன திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.

நாகப்பட்டினம்

குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட

வேதாரண்யம் தாலுகா தகட்டூரை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தகட்டூர் மின் இறவை பாசன திட்டம் 1951-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தகட்டூர், மருதூர் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1,580 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற்று வந்தது.

இறவை பாசன திட்டம்

35 குதிரை திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் இந்த இறவை பாசனம் திட்டம் செயல்பட்டு வந்தது. தற்போது இதன் மோட்டார்கள் பழுதானதாலும், பணியாளர்கள் இல்லாததாலும் இந்த இறவை பாசனம் பயன்பாடு இன்றி கிடைக்கிறது.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தகட்டூர் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இறவை பாசன திட்டத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுமனைப்பட்டா

வேதாரண்யம் செட்டிபுலம் தியாகராஜபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கொடுத்த மனுவில், நாங்கள் 40 ஆண்டுகளாக தியாகராஜபுரத்தில் வசித்து வருகிறோம் எங்களுக்கு நிலமோ, வீடோ கிடையாது. எனவே எங்களது அவல நிலையை அறிந்து வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story