ஆற்றில் பிணமாக கிடந்த பெண்


ஆற்றில் பிணமாக கிடந்த பெண்
x

ஆற்றில் பெண் பிணமாக கிடந்தார்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் நேற்று ஒரு பெண் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள், விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்வையிட்டனர். இதில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் உள்ள மணல்திட்டு பகுதியில் இறந்து கிடந்த அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பெண் இறந்து 5 நாட்கள் இருக்கலாம் என்று போலீசார் கருதினர். மேலும் இறந்து கிடந்த அந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த பெண் விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ புரந்தான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேலின் மகள் செல்வி(40) என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், வீட்டில் தங்காமல் அடிக்கடி வெளியே சென்று விடுவார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு சென்றது ஏன்? யாரேனும் அவரை அழைத்துச் சென்றார்களா? அந்த பெண் எப்படி இறந்தார்? என்பது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால், ஜெயங்கொண்டத்தில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலை உறவினர்கள் பெற்று அங்கேயே அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story