கல்லால் தாக்கி டிரைவர் கொலை


கல்லால் தாக்கி டிரைவர் கொலை
x
தினத்தந்தி 16 Jan 2023 6:45 PM GMT (Updated: 16 Jan 2023 6:47 PM GMT)

சுரண்டை அருகே கல்லால் தாக்கி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே கல்லால் தாக்கி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்கள்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கருப்பசாமி (வயது 34). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் செல்வகுமார் (23). டிரைவர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் பொங்கல் அன்று இரவில் 2 பேரும் ஊருக்கு ஒதுக்குபுறமான ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மது அருந்திக் கொண்டு இருந்தனர்.

கல்லால் தாக்கி கொலை

அப்போது, அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் அருகில் கிடந்த கல்லை எடுத்து கருப்பசாமியின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடனடியாக சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுரண்டை அருகே கல்லால் தாக்கி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story